லெமூரியா கண்டம்

March 25, 2006

லெமூரியா மெய்யா? கற்பனையா?

இரா.கு.பாலசுப்பிரமணியன்

2004 டிச.26. பூகம்பத்தாலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடல் சீற்றத்தாலும், சுனாமி எனப்படும் பேரலைகளால் இந்தியப் பெருங்கடல் பகுதிகளை ஒட்டிய பலநாடுகளின் கடற்கரைப் பிரதேசங்கள் பெரும் அழிவைச் சந்தித்தன. பேரலைகளால் இத்தகு அழிவைச் சந்திப்பது இந்தியா போன்ற நாடுகளுக்குப் புதிது என்றனர் பலர்.

இத்தகைய சீற்றத்தின்போது மாமல்லபுரத்தில் கடல் சற்றே உள்வாங்கி, பிறகு வழக்கமான நிலைக்கு வந்தது. அப்போது கடலிலிருந்து வெளித் தெரிந்த பாறைகளும் கற்களும் கடல் கொண்ட பழம் நாகரிகத்தைப் பறை சாற்றின. அங்கே ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் எழுந்துள்ளது. இத்தகைய கடல் சீற்றத்தை நாம் உணரும் போது, பண்டைய லெமூரியாக் கண்டம் பற்றியும், அது எப்படி கடல்கொண்டு அழிந்து போயிருக்கும் என்பது பற்றியும் உணரத் தலைப்பட்டோம். லெமூரியா உண்மையில் இருந்ததா என்பதில் இருவேறு கருத்துகள் உண்டு. புவியில் ஏற்படும் மாற்றங்கள், கண்டங்கள் நகர்வது ஆகியவற்றை மக்கள் தற்போது பேசத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய மனநிலையோடு இந்தக் கட்டுரையைப் படிக்கத் தொடங்குங்கள்…

கி.பி.19 ஆம் நூற்றாண்டின் நடுவில், இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி உறுப்பினர் பி.எல்.ஸ்கிலேட்டர் எனும் உயரியல் அறிஞர், “”கடல் கொண்ட கண்டம் ஒன்று இருந்தது'’ என்று தன் கருத்தைக் கூறும் போது, அதற்கு லெமூரியா என்ற பெயரைச் சூட்டினார்.

அந்தக் காலகட்டத்தில் அறிஞர் பலரின் கவனத்திற்கு உட்பட்டு ஆய்வுக்குரிய பொருளானது லெமூரியா. பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்ந்த தாமஸ் ஹக்ஸ்லி (1825 & 1895) மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இந்துமாக்கடலில் பாலூட்டிகள் தோன்றி வளர்ந்த “செனாசாயிக்’ என்ற காலகட்டத்தின் மூன்றாவது யுகமான “மயேசென்’ யுகத்தில் கண்டம் ஒன்று இருந்தது என்பதை ஏற்றுக் கொண்டார். இயற்கை ஆராய்ச்சியாளர் ஆல்ஃபிரடு ரசல் வாலஸ் (1823 & 1913) மற்றும் ஏனஸ்ட் ஹென்றிக் ஹெகல் (1834 1919) என்ற ஜெர்மானிய உயிரியல் அறிஞர் ஆகியோர் ஸ்கிலேட்டரின் கருத்தை ஆதரித்தனர்.
“லெமூரியா மனித இனத்தின் தொட்டிலாக இருக்கலாம்; சிம்பன்சி, உராங்குட்டான், கொரில்லா, கப்பன் போன்ற ஆந்திரப்பாய்டு மனிதக் குரங்குகளிலிருந்து மனிதர் முதலில் லெமூரியாவில் உண்டாகி யிருக்கலாம்'’ என்பதை ஹெகல் முதலில் கூறினார். லெமூர் என்ற குரங்கிலிருந்து லெமூரியா என்ற பெயர் சூட்டப்பட்டது. சிறு பாலூட்டியான இதற்கு கண்கள் பெரியதாகவும், மூக்கு கூர்மையாகவும், மேனியில் மென்மையான முடிகள் மூடியதாகவும் இருக்கும் இக்குரங்கினம், அதிகமாக ஆப்பிரிக்காக் கண்டத்தின் தென்கிழக்குக் கரைக்கு அப்பால் இந்து மாக்கடலில் உள்ள மடகாஸ்கர் தீவில் இருக்கிறது. இது இரவில் நடமாடக் கூடிய விலங்கினம். லெமூர் மற்றும் அதை ஒத்த தொடர்புடைய குரங்கும் உலகின் வடகோளம் முழுவதிலும் வாழ்ந்திருக்கக் கூடும். அவை இன்று ஆப்பிரிக்கா, தென்னிந்தியா, மலேயா முதலிய நாடுகளை உறைவிடமாகக் கொண்டுள்ளன. எனவே லெமூரியா என்ற நிலப்பரப்பு ஆசியாவின் தென்கரைக்குக் குறுக்கே மலேயா தீவுக் கூட்டங்களிலிருந்து மடகாஸ்கர் தீவு வரை நீண்டு இருந்திருக்கலாம்.

உலகிலுள்ள பெருங்கடல்களில் ஒன்றான அட்லாண்டிக்கின் ஜிப்ரால்டருக்கு மேற்கே ஒரு பெருந்தீவு (அ) கண்டம் இருந்ததென்று தம் முன்னோர் குறிப்பிட்டிருந்ததைத் தத்துவஞானி பிளாட்டோ (கி.மு.427 & 347) அறிவித்திருந்ததால், அது அறிஞர் பலரின் சிந்தனைக்கு உள்ளாகி, அத்தீவு மெய்யாகவே இருந்ததா? அல்லது, கற்பனையா? என்ற வினாக்களை எழுப்பிப் பல நூல்கள் தோன்றக் காரணமாயிற்று. தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா (தென்துருவக் கண்டம்) முதலியன அடங்கிய மிகப்பெரிய கண்டம் ஒன்று 3000 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியின் தென்பகுதியில் இருந்ததாம். அதனை “கோண்ட்வானா’ என்று அறிஞர்கள் குறித்துள்ளனர். அது 180 ,150 மில்லியன் ஆண்டுகளுக்கு இடையில் உடையத் தொடங்கியதாம்.

இருந்தபோதும் இந்தத் தொல்கண்டம் பற்றிய வரலாற்று விஷயங்கள் இன்னும் தெளிவாகப் புலப்படாமல் இருக்கின்றன. இந்து மாக்கடல் (அ) அதன் சில பகுதிகளாயினும் கோண்ட்வானா நிலப்பரப்பில் அடங்கியிருந்தனவா? அல்லது, அவை இரண்டும் எப்போதும் தனித்தே இருந்தனவா? இவ்வினாக்களுக்கு விடை உறுதியாகத் தெரியவில்லை. கோண்ட்வானா, இந்து மாக்கடல் ஆகியவற்றின் தோற்றம் பற்றி, கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன என்ற யூகத்தின் அடிப்படையிலேயே புவியியல், கடலியல் அறிஞரிடையே அதிகமாக சர்ச்சை கிளம்பியிருக்கிறது.
ஜெர்மானிய அறிஞர் ஆல்ஃபிரட் வேஜனர், 1915 இல் கண்டங்கள் பிரிந்து மிதந்து செல்கின்றன. தமது “கண்டங்கள் கடற்படுகைகளின் தோற்றம்’ எனும் நூலில் எடுத்துரைத்தார். உலகம் பூராவும் ஒரு காலத்தில் ஒரே கண்டமாக இருந்தது; பின்பு கோள்களின் ஈர்ப்பு விசைகள், பூமிக்குள் அதிகமான ஆழத்தில் நிகழ்ந்த செயல்கள் முதலியன அவ்வுலகை இருபெரும் கண்டங்களாக பிரித்தன; ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியாவின் பெரும் பகுதி அடங்கியது வடகோளம், கோண்ட்வானா கொண்டது தென்கோளம் என்பது வேஜனரின் கருத்து.

அறிஞர் ஃபிரான்சிஸ் பேக்கன் (1561 - 1626), ஆப்பிரிக்காவின் திருகு வெட்டு வடிவான மேற்குக் கரையையும், தென்அமெரிக்காவின் கிழக்குக் கரையையும் ஒப்பு நோக்கி, அவை ஒன்றோடு ஒன்று பொருந்தியதைச் சொன்னவர். புவியின் உட்கருவைச் சுற்றியுள்ள திரையின் மேலும் கீழும் பக்கவாட்டிலும் அதன் மேல் கண்டங்கள் நகர்கின்றன என்ற வேஜனரின் கருத்தை அறிஞர் பலர் ஏற்றுக் கொண்ட போதிலும், அறிவியலார் அக்கருத்தை ஏற்க மறுக்கின்றனர். வேஜனரின் கொள்கை எளிதில் ஏற்புடையதாக இருந்த போதிலும், திண்மையான கண்டங்கள் கடலில் மிதந்து இடம் பெயர்வது சாத்தியம் தானா? அப்படி அவை மிதந்து செல்லக் கூடுமாயின், அவற்றை அவ்வாறு இயக்கும் ஆற்றல் எது? இவைபோன்ற வினாக்களுக்கு விஞ்ஞானப்பூர்வ விடை இன்னும் கிடைக்கவில்லை.

சுமார் 200 மில்லியன் ஆண்டுகள் வரையிலும் பாங்கியா என்ற பெருங்கண்டம் ஒன்று இருந்ததாம். கிரேக்கச் சொல் “பாங்கியா’வுக்கு “அனைத்துலகு’ என்று பொருள்.

இந்தப் பாங்கியா, பின்னர் லாரேசியா , கோண்ட்வானா என்ற இரண்டாகப் பிரிந்தது. அவற்றை தேத்திஸ் என்ற கடல் பிரித்தது. லாரேசியாவில் வடஅமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவும், கோண்ட்வானாவில், தென்அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா ஆகியவையும் அடங்கும். அவை இரண்டும் இன்று நாம் காணும் கண்டங்களாக மீண்டும் பிளவுபட்டன.

இவையனைத்தும் ஒரே காலத்தில் நிகழவில்லை. கடலுக்கடியில் உண்டாகும் சக்திகள் நிலப்பரப்பை மிதந்து மெல்ல இடம் பெயருமாறு செய்கின்றன. இது நீடிக்குமானால், நிலப்பரப்பு ஓர் ஆண்டில் சில மி.மீ.க்கு மேல் செல்லாது. இன்றைய உலகம் இனி 50 மில்லியன் ஆண்டுகளுக்குப் பின் இப்போது உள்ளது போல் இல்லாமல், அப்போது அட்லாண்டிக் மாக்கடல் விரிந்து காணப்படும்; ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் மிகப் பெரிய பிளவு உண்டாகும், ஆசியாவை நோக்கி ஆஸ்திரேலியா நகரத் தொடங்கும் என்றெல்லாம் சொல்கின்றனர் அறிவியலார்.

தென்கிழக்கு ஆசியாவின் கரையோரப் பகுதி முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக கடலினுள் மூழ்கி வருகிறது என்பதைத் தற்காலத்தில் பெறப்படும் நிலவியல் சான்றுகள் காட்டுகின்றன. இவ்வாறு நிலம் நீரினுள் அமிழும் செயல் முன்னொரு காலத்தில் மிகவும் வேகமாகவும் பரந்த அளவிலும் நடந்திருக்கலாமாம்!

ஆப்பிரிக்காவின் பெரும்பாறை வெடிப்புப் பள்ளத்தாக்கு போன்ற நிலப் பரப்பு பரந்த அளவில் வெடித்துப் பிளந்து போனதைப் பார்க்கும் போது, கண்டம் பிளந்தது என்ற யூகத்தில் நியாயம் உண்டு. ஆனாலும், தனிக் கண்டம் ஏன் உடைந்தது என்பதற்கான காரணம் புலப்படாமல் உள்ளது.
கண்டங்கள் அதிக தூரம் நகர்கின்றன என்ற வேஜனரின் கொள்கையை அறவே மறுப்பவர்கள், கண்டங்களின் ஓரங்களில் காணப்படும் ஒத்த தன்மையை வேஜனர் சுட்டிக் காட்டுகையில், அது தற்செயல் பொருத்தம் என்று கூறி நிராகரித்து விடுகின்றனர்.
பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் உடைந்த கோண்ட்வானா, சிதறுண்ட பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர்கூட இந்து மாக்கடலின் வடமேற்கில் லெமூரியா என்ற பெரிய கண்டம் தொடர்ந்து இருந்து வந்தது என்பார் ஸ்கிலேட்டர்.
ஹோமோ சேப்பியன் எனும் மனிதன் தற்போது கடலில் மூழ்கிக் கிடக்கும் லெமூரியாவிலிருந்து தோன்றினான் என்றார் ஹக்ஸ்லி. அவரது கொள்கையை ஹெகல் விரிவுபடுத்தினார். இவர்கள் இருவரின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டே ஃபிரடரிக் எங்கல்ஸ் (1820 & 1895), “”பரிணாம வளர்ச்சி பெற்ற ஆந்திரபாய்ட் என்ற மனிதக் குரங்குகள் இன்னும் இந்து மாக்கடலுள் மூழ்கியுள்ள பெரிய கண்டத்தில் வாழ்ந்திருக்கலாம்'’ என்று “மனிதக் குரங்கிலிருந்து மனிதனாக மாறிய கட்டத்தில் உழைப்பு ஆற்றிய பங்கு’ என்ற நூலில் கூறுகிறார். லெமூரியாவானது குமரிக்கண்டம், குமரிநாடு, நாவலந்தீவு என்பனவாகத் தமிழ் இலக்கியங்களில் இயம்பப் படுகிறது. இளம்பூரணர் போன்ற ஆசிரியர்களின் உரைகளாலும், இறையனார் களவியல் உரை, அடியார்க்கு நல்லாரின் சிலப்பதிகார உரை போன்ற உரைகளாலும் குமரிக் கண்டம் விளக்கம் பெறுகிறது.
“”நெடியோன் குன்றமுந்த தொடியோள் பெüமும்
தமிழ்வரம் பறுத்த தண்டி னன்னாட்டு'’ (சில 8:12)
“”வடிவே லெறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள'’ (சில 11:1:20)
இன்றுள்ள குமரிமுனைக்கு 200 கல் தொலைவில் தெற்கில் குமரிமலையில் தோன்றி கிழக்கு நோக்கிப் பாய்ந்தது குமரியாறு. குமரியாற்றுக்கு சுமார் 700 கல் தெற்கில் பன்மலைத் தொடரில் தோன்றி பஃறுளியாறு (பல்+துளி= பஃறுளி; துளி=சிற்றாறு) என்னும் பேராறு பாய்ந்தது.
ஏழேழு உள்நாடுகளாகப் பிரிவு பட்டிருந்த அந்தப் பெருவள நாடு, இன்றுள்ள தென் கடற்கரையின் தெற்கில் 1500 கல்லுக்கு மேல் பரவியிருந்தது. அதன் வடமேற்கில் குமரி, கொல்லம் முதலிய பல மலைநாடுகளும் காடுகளும் இருந்தன. குமரிமலை, பன்மலைத் தொடர் முதலாக அப்பெருவள நாட்டின் மேற்கில் இருந்த மலைகள் எல்லாம் மேற்கு மலைத் தொடரின் தொடர்ச்சியே ஆகும்.
“தடநீர்க்குமரி’ என்பதால் அக்குமரிமலை, மிக்க நீர்வளம் பொருந்தியது என்பது விளங்குகிறது. “நதியும் பதியும்’ என்பதால், பஃறுளி அல்லாத வேறு பல ஆறுகளும், பாய்ந்து பேரூர்கள் பல கொண்டு விளங்கியது அப்பெருவள நாடு. ஏறக்குறைய 500 கல் பரப் புடைய நிலம் பஃறுளியாற்றின் தென்பால் இருந்ததால், அந்நிலம் தென்பாலி நாடு எனப் பெயர் பெற்றது. அஃதும் பல உள்நாடுகளாகப் பிரிக்கப் பட்டிருக் கலாம். இப்பெருவள நாட்டில் குமரிமலை, பன்மலை தவிர பனிமலை, மணிமலை போன்ற மலைகளும், நாவலந் தண்பொழில் நாடும் இருந்தன. “நீர் மலிவான்’ என்பதால் அப்பெரு வளநாடு நீர்வளமும் நிலவளமும் பிற வளங்களும் உடையதாக மக்களின் நல்வாழ்வுக்கு ஏற்ற நன்னாடாக விளங்கியது. பலமுறை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் அவை யாவும் கடலுள் மூழ்கிவிட்டன.
லெமூரியாக் கண்டத்தில் பெரும்பாலும் அழிந்தது போக மீதியாகித் தமிழ்நாட்டுடன் ஒட்டிக் கிடந்த பகுதியே குமரிநாடாயிருக்க வேண்டும் என்ற கருத்தைத் தருகிறார் பன்மொழிப் புலவர் க. அப்பாதுரையார் (குமரிக் கண்டம்). இப்போது இந்துமாக் கடலுள் மூழ்கிக் கிடக்கும் கோண்ட்வானா என்ற பரந்த கண்டத்தின் வடபகுதியே லெமூரியா (எ) குமரி நாடு அல்லது நாவலந்தீவு என நம்புகின்றனர் தமிழ் ஆய்வாளர்கள்.

http://tamil.sify.com/manjari/feb05/fullstory.php?id=13689479

கம்பரின் ஏரெழுபது

March 19, 2006

கம்பர்
இயற்றிய
ஏரெழுபது

இராமாயணம் இயற்றிய கம்பர் எழுதிய ஒன்பது நூல்களுள் ஏரெழுபதும் ஒன்றாகும். கம்பர்
சோழர்களின் திருவழுந்தூர் கிராமத்தில் உச்சவர் மரபில் ஆதித்தர் என்பவருக்குப்
மகனாகப் பிறந்தார். இவரது மரபுச் சமயம் வைணவம். இவரை ஆதரித்தவர்
சடையப்பவள்ளல். இவருடைய காலம் கி.பி.12 ஆம் நூற்றாண்டு என்றும் கி.பி.9 ஆம்
நூற்றாண்டு என்றும் கூறுவர். இவரது வேறு நூல்கள் சடகோபர் அந்தாதி, சரசுவதி
அந்தாதி, திருக்கை வழக்கம் முதலியவை.

பாயிரம்
1. கணபதி வணக்கம்
கங்கைபெறும் காராளர் கருவியெழு பதுமுரைக்க
அங்கைபெறும் வளைத்தழும்பு முலைத்தழும்பு மணியமலை
மங்கைபெறும் திருவுருவாய் வந்துறைந்தார் தமைவலஞ்செய்
கங்கைபெறுந் தடவிகடக் களிற்றானைக் கழல்பணிவாம். 1

2. மூவர் வணக்கம்
நிறைக்குரிய வந்தணர்கள் நெறிபரவ மனுவிளங்கத்
தறைக்குரிய காராளர் தமதுவரம் பினிதோங்க
மறைக்குரிய பூமனையும் வண்டுளபத் தாமனையும்
பிறைக்குரிய நெடிஞ்சடிலப் பெம்மானை யும்பணிவாம். 2

3. நாமகள் வணக்கம்
திங்களின்மும் மாரிபெயச் செகத்திலுயிர் செழித்தோங்கக்
கங்கைகுலா திபர்வயலிற் கருவீறத் தொழுகுலத்தோர்
துங்கமக மனுநீதி துலங்கிடவை யம்படைத்த
பங்கயன்ற னாவிலுறை பாமடந்தை பதந்தொழுவாம். 3

4. சோழ நாட்டுச் சிறப்பு
ஈழ மண்டல முதலென உலகத் தெண்ணு மண்டலத் தெறிபடை வேந்தர்
தாழு மண்டலஞ் செம்பியன் மரபினோர் தாமெலாம்பிறந் தினியபல் வளத்தின்
வாழு மண்டலங் கனகமு மணிகளும் வரம்பில் காவிரி குரம்பினிற் கொழிக்குஞ்
சோழ மண்டல மிதற்கிணை யாமெனச்சொல்லு மண்டலஞ் சொல்வதற் கில்லையே. 4

5. சோழ மன்னன் சிறப்பு
முடியுடைய மன்னவரின் மூவுலகும் படைத்துடைய
கொடியுடைய மன்னவரிற் குலவுமுதற் பெயருடையான்
இடியுடைய வொலிகெழுநீ ரெழுபத்தொன் பதுநாட்டுக்
குடியுடையான் சென்னிபிற ரென்னுடையார் கூறீரே. 5

6. சோழன்தன் பெருநாட்டுச் சிறப்பு
மந்தர மனைய திண்டோ ண் மணிமுடி வளவன் சேரன்
சுந்தர பாண்டி யன்றன் சுடர்மணி மகுடஞ் சூட
அந்தணர் குலமு மெல்லா வறங்களும் விளங்க வந்த
இந்திர னோலக் கம்போ லிருந்தது பெரிய நாடே. 6

7. வேளாண் குடிச் சிறப்பு
ஆழித்தேவர் கடலானார் அல்லாத்தேவர் அம்பலத்தார்
ஊழித்தேவர் தாங்கூடி உலகங் காக்க வல்லாரோ
வாழித்தேவர் திருமக்கள் வையம் புரக்கும் பெருக்காளர்
மேழித்தொவர் பெருமைக்கு வேறே தேவர் கூறேனே. 7

8. வேளாளர் சிறப்பு
தொழுங்குலத்திற் பிறந்தாலென் சுடர்முடிமன் னவராகி
எழுங்குலத்திற் பிறந்தாலென் இவர்க்குப்பின் வணிகரெனுஞ்
செழுங்குலத்திற் பிறந்தாலென் சிறப்புடைய ரானாலென்
உழுங்குலத்திற் பிறந்தாரே உலகுய்யப் பிறந்தாரே. 8

9. அருட் சிறப்பு
அழுங்குழவிக் கன்புடைய தாயேபோ லனைத்துயிர்க்கும்
எழுங்கருணைப் பெருக்காளர் எளியரோ யாம்புகழ
உழுங்கெழுவிற் கருவீறி யுலகமுதற் கருவாகச்
செழுங்கமலத் தயனிவரைச் செய்துலகஞ் செய்வானேல். 9

பாயிரம் முற்றிற்று.

நூல்
1. வேளாண் குலத்திற்கு நிகரில்லை
வேதியர்தம் உயர்குலமும் விறல்வேந்தர் பெருங்குலமும்
நீதிவளம் படைத்துடைய நிதிவண்கர் தம்குலமுஞ்
சாதிவளம் படைத்துடைய தாயனைய காராளர்
கோதில்குலந் தனக்குநிக ருண்டாகிற் கூறீரே. 10

2. உழவிற்கு இனிய நாள் கோடலிஞ் சிறப்பு
சீர்மங்க லம்பொழியுந் தெண்டிரைநீர்க் கடல்புடைசூழ்
பார்மங்க லம்பொழியும் பல்லுயிருஞ் செழித்தோங்கும்
கார்மங்க லம்பொழியும் பருவத்தே காராளர்
ஏர்மங்க லம்பொழிய வினிதுழநாட் கொண்டிடினே. 11

3. ஏர்விழாச் சிறப்பு
நீர்விழாக் கொளவளர்ந்த நிலமெல்லாந் தம்முடைய
சீர்விழாக் கொளவிளக்குந் திருவிழாப் பெருக்காளர்
ஏர்விழாக் கொளினன்றி யெறுழ்கரிதேர் மாப்படையாற்
போர்விழாக் கெளமாட்டார் போர்வேந்த ரானோரே. 12

4. அலப்படைவாள் சிறப்பு
குடையாளு முடிவேந்தர் கொலையானை தேர்புரவி
படையாளு மிவைநான்கும் படைத்துடைய ரானாலென்
மடைவாளை வரும்பொன்னி வளநாடர் தங்கள்கலப்
படைவாளைக் கொண்டன்றிப் பகையறுக்க மாட்டாரே. 13

5. மேழிச் சிறப்பு
வாழிநான் மறையோர்கள் வளர்க்கின்ற வேள்விகளும்
ஆழியால் உலகளிக்கும் அடல்வேந்தர் பெருந்திருவும்
ஊழிபே ரினும்பெயரா உரனுடைய பெருக்காளர்
மேழியால் விளைவதல்லால் வேறொன்றால் விளையாவே. 14

6. ஊற்றாணிச் சிறப்பு
நீற்றோனும் மலரோனும் நெடியோனும் என்கின்ற
தோற்றாள ரவராலே தொல்லுலகு நிலைபெறுமோ
மாற்றாத காவேரி வளநாடர் உழுங்கலப்பை
ஊற்றாணி யுளதாயின் உலகுநிலை குலையாதே. 15

7. நுகத்தடிச் சிறப்பு
உரையேற்ற செங்கதிரோன் ஒளிநெடுந்தேர் பூண்டநுகம்
திரையேற்ற கடலுலகில் செறியிருளை மாற்றுவது
விரையேற்ற விருநிலத்தோர் நெறுமையோடு வீழாமே
கரையேற்று நுகமன்றோ காராளர் உழுநுகமே. 16

8. நுகத்துளைச் சிறப்பு
வளைத்ததிரைக் கடல்சூழ்ந்த வையகத்தோ ரெல்லார்க்குந்
துளைத்ததுளை பசும்பொன்னின் அணிகிடங்குந் துளைத்தல்லால்
திளைத்துவரும் செழும்பொன்னி திருநாடர் உழுநுகத்தில்
துளைத்ததுளை போலுதவுந் துணையுளதோ சொல்லீரே. 17

9. நுகத்தாணியின் சிறப்பு
ஓராணித் தேரினுக்கும் உலகங்கள் அனைத்தினுக்கும்
பேராணிப் பெருக்காளர் பெருமைக்கு நிகருண்டோ
காராணிக் காவேரி வளநாடர் உழுநுகத்தின்
சீராணிக் கொப்பதொரு சிறந்தாணி செப்பீரே. 18

10. பூட்டு கயிற்றின் சிறப்பு
நாட்டுகின்ற சோதிடத்தில் நாண்பொருத்தம் நாட்பொருத்தங்
காட்டுகின்ற கயிறிரண்டும் கயிறல்ல கடற்புவியில்
நீட்டுப்புகழ் பெருக்காளர் செழுநுகத்தோ டுழும்பகடு
பூட்டுகின்ற கயிறிரண்டும் புவிமகண்மங் கலக்கயிறே. 19

11. தொடைச் சிறப்பு
தடுத்தநெடு வரையாலும் தடவரைக ளெட்டாலும்
உடுத்த திரைக் கடலாலும் உலகினிலை வலியாமோ?
எடுத்த புகழ் பெருக்காளர் எழுநுகத்தோ டிணைப்பகடு
தொடுத்ததொடை நெகிழாதேல் உலகுதொடை நெகிழாதே. 20

12. கொழுச் சிறப்பு
வேதநூல் முதலாகி விளங்குகின்ற கலையனைத்தும்
ஓதுவா ரெல்லாரும் உழுவார்தந் தலைக்கடைக்கே
கோதைவேள் மன்னவர்தம் குடைவளமுங் கொழுவளமே
ஆதலால் இவர்பெருமை யாருரைக்க வல்லாரே. 21

13. கொழு ஆணியின் சிறப்பு
செழுவான மழைவாரி திங்கடொறும் பொழிந்தாலும்
கெழுநீரா நிலமடந்தை கீழ்நீர்க்கொண் டெழுந்தாலும்
வழுவாத காவேரி வளநாடர் உழுகலப்பைக்
கொழுவாணி கொண்டன்றிக் குவலயஞ்சீர் நிரம்பாதே. 22

14. தாற்றுக்கோல் சிறப்பு
வெங்கோபக் கலிகடந்த வேளாளர் விளைவயலுள்
பைங்கோல முடிதிருந்தப் பார்வேந்தர் முடிதிருந்தும்
பொங்கோதை கடற்றானைப் போர்வேந்தர் நடத்துபெருஞ்
செங்கோலை நடத்துங்கோல் ஏரடிக்குஞ் சிறுகோலே. 23

15. உழும் எருதின் சிறப்பு
வானமழை பொழிந்தாலும் வளம்படுவ தெவராலே
ஞானமறை யவர்வேள்வி நலம்பெறுவ தெவராலே
சேனைகொடு பொருமன்னர் செருக்களத்திற் செகுக்குமத
யானைவலி யெவராலே இவரெருத்தின் வலியாலே. 24

16. எருதின் கழுத்துக்கறை சிறப்பு
கண்ணுதலோன் தனதுதிருத் கண்டத்திற் படிந்தகறை
விண்ணவரை யமுதூட்டி விளங்குகின்ற கறையென்பார்
மண்ணவரை யமுதூட்டி வானுலகங் காப்பதுவும்
எண்ணருஞ்சீர்ப் பெருக்காளர் எருதுசுவ லிடுகறையே. 25

17. எருது பூட்டுதற் சிறப்பு
ஊட்டுவார் பிறருளரோ வுலகுதனில் உழுபகடு
பூட்டுவார் புகழன்றிப் பிறர்புகழும் புகழாமோ
நாட்டுவார் சயத்துவசம் நயப்பாரை இவர்க்குநிகர்
காட்டுவார் யார்கொலிந்தக் கடல்சூழ்ந்த வையகத்தே. 26

18. ஏர் பூட்டலின் சிறப்பு
பார்பூட்டுந் திசையனைத்தும் பகடுகளும் பரம்பூணா
போர்பூட்டுங் காமனுந்தன் பொருசிலைமேற் சரம்பூட்டான்
கார்பூட்டுங் கொடைத்தடக்கை காவேரி வளநாடர்
ஏர்பூட்டி னல்லதுமற் றிரவியுந்தேர் பூட்டானே. 27

19. ஏர் ஓட்டுதலின் சிறப்பு
கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயனடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே. 28

20. உழுவோனின் சிறப்பு
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே. 29

21. உழவின் சிறப்பு
அலகிலா மறைவிளங்கும் அந்தணரா குதிவிளங்கும்
பலகலையாந் தொகைவிளங்கும் பாவலர்தம் பாவிளங்கும்
மலர்குலாந் திருவிளங்கும் மழைவிளங்கும் மனுவிளங்கும்
உலகெலாம் ஒளிவிளங்கும் உழவருழும் உழவாலே. 30

22. உழுத சாலின் சிறப்பு
பழுதுசால் வகையறியாப் பழமறையோர் பெருவேள்விக்
குழுதுசால் வதுகலப்பை யுயர்வான தென்றக்கால்
எழுதுசால் பெருங்கீர்த்தி யேராளும் பெருக்காளர்
உழுதசால் வழியன்றி யுலகுவழி யறியாதே. 31

23. மண்வெட்டியின் சிறப்பு
மட்டிருக்குந் திருமாது மகிழ்திருக்கும் பூமாது
முட்டிருக்குஞ் செயமாது முன்னிருப்பார் முதுநிலத்து
விட்டிருக்கும் கலிதொலைத்து வோளாளர் தடக்கையினிற்
கொட்டிருக்க ஒருநாளும் குறையிருக்க மாட்டாதே. 32

24. வரப்பின் சிறப்பு
மெய்வரம்பா நிற்கின்ற வேதநூல் நெறிவரம்பாம்
இவ்வரம்பும் அவ்வரம்பும் இப்புவிக்கு வரம்பாமோ?
பொய்வரம்பு தவிர்த்தருளும் புவிமடந்தை திருமைந்தர்
செய்வரம்பு திருத்தாரேல் திசைவரம்பு திருந்தாதே. 33

25. எருவிடுதலின் சிறப்பு
அடுத்திறக்கிப் பெருங்கூடை யளவுபட வேயெருவை
எடுத்திறக்கித் தலைமேலே கொண்டவர்தா மிடையிடையே
கொடுத்திறக்கி நிலமகளைக் கும்பிட்டு வணங்காரேற்
படுத்திறக்கித் திரிவார்தம் பழிமறுக்க மாட்டாரே. 34

26. சேறு செய்தற் சிறப்பு
வெறுப்பதெல்லாம் பொய்யினையே வேளாளர் மெய்யாக
ஒறுப்பதெல்லாங் கலியினையே யுள்ளத்தால் வெள்ளத்தாற்
செறுப்பதெல்லாம் புல்லினையே செய்யின்வளம் அறிந்தறிந்து
மறிப்பதெல்லாஞ் சேற்றினையே வளம்படுதற் பொருட்டாயே. 35

27. பரம்படித்தலின் சிறப்பு
வரம்படிக்க மலர்பரப்பி வயலடிக்க வரம்புதொறும்
குரம்படிக்க மணிகொழிக்குங் குலப்பொன்னித் திருநாடர்
பரம்படிக்க வுடைந்தளைந்த பழனச்சேற் றுரமன்றி
உரம்பிடிப்பப் பிறிதுண்டோ வுண்டாயி னுரையீரே. 36

28. வித்திடுதலின் சிறப்பு
பத்திவிளைத் திடுந்தெய்வம் பணிவார்க்குந் தற்பரமா
முத்திவளைத் திடுஞான முதல்வருக்கு மின்னமுதம்
வைத்துவிளைத் திடுவார்க்கும் வல்லவர்க்கும் பெருக்காளர்
வித்துவிளைத் திடிலன்றி வேண்டுவன விளையாவே. 37

29. முளைத்திறனின் சிறப்பு
திறைமயங்கா தருள்விளக்குஞ் செயன்மயங்கா திறல்வேந்தர்
நிறைமயங்கா வணிகேசர் நிலைமயங்கா அந்தணர்கள்
மறைமயங்கா தொருநாளும் மனுமயங்கா துலகத்தின்
முறைமயங்கா தவர்வயலின் முளைமயங்காத் திறத்தாலே. 38

30. நாற்றங்காலின் சிறப்பு
ஏறுவளர்த் திடுமுகிலும் இசைவளர்க்கு மெனவுரைப்பின்
ஆறுவளர்த் திடுவதுசென் றடைகடலைத் தானன்றோ?
வேறுவளர்ப் பனகிடப்ப வேளாளர் விளைவயலின்
நாறுவளர்த் திடிலன்றி ஞாலமுயிர் வளராதே. 39

31. நாற்று பறித்தலின் சிறப்பு
வெறுத்துமீன் சனிபுகிலென் வெள்ளிதெற்கே யாயிடிலென்
குறித்தநாள் வரம்பழியாக் குலப்பொன்னித் திருநாடர்
மறித்துநாட் டிடநின்ற வளவயலி னிடைநாற்றைப்
பறித்துநாட் கொண்டதற்பின் பார்பசிக்க மாட்டாதே. 40

32. நாற்று முடி சுமந்த சிறப்பு
மாணிக்க முதலாய மணியழுத்தித் தொழில்சமைத்த
ஆணிப்பொன் முடிவேந்தர் அணிமுடியு முடியாமோ?
பேணிப்பைங் கோலமுடி பெருக்காளர் சுமவாரேல்
சேணுக்குந் திசைப்புறத்துஞ் செங்கோன்மை செல்லாதே. 41

33. உரிய இடத்தினில் முடிசேர்த்தலின் சிறப்பு
தென்னன்முடி சேரன்முடி தெங்குபொன்னி நாடன்முடி
கன்னன்முடி கடல்சூழ்ந்த காசினியோர் தங்கண்முடி
இன்னமுடி யன்றியுமற் றெடுத்துரைத்த முடிகளெல்லாம்
மன்னுமுடி வேளாளர் வயலின்முடி கொண்டன்றோ? 42

34. நடவு மங்கலப்பாட்டின் சிறப்பு
வெய்யகலி வலிதொலைக்கும் வேளாளர் விளைவயலிற்
செய்யின்முடி விளம்பாரேல் விளம்புவன சிலவுளவோ?
மையறுமந் தணர்விளம்பார் மறைமனுமன் னவர்விளம்பார்
ஐயமறு புலவோரும் அருந்தமிழ்நூல் விளம்பாரே. 43

35. பாங்கான நடவின் சிறப்பு
மெய்ப்பாங்கு படக்கிடந்த வேதநூல் கற்றாலென்
பொய்ப்பாங்கு படப்பிறரைப் புகழுநூல் கற்றாலென்
செய்ப்பாங்கு படக்கிடந்த செழுஞ்சாலி நன்னாற்றைக்
கைப்பாங்கு பகுந்துநடக் கற்றாரே, கற்றாரே! 44

36. உழுதலுடனே நடவு செய்தலின் சிறப்பு
உலகத்திற் பகடுழக்கும் ஓங்குமுடித் திறல்வேந்தர்
அலறத்திண் பகடுழுக்கும் அதுவுமொரு முனையாமோ?
உலகத்திற் பகடுழக்கும் உயர்முடிகொள் வேளாளர்
சிலவருழச் சிலவர்நடு முனையன்றோ திருமுனையே. 45

37. சேறாக்கி எருவிடுதலின் சிறப்பு
ஏராலே சேறாக்கி யெருவாலே கருவாக்கி
நீராலே பைங்கூழை நிலைப்பிப்பார் தமையன்றிக்
காராலே காவேரி நதியாலே காசினியில்
ஆராலே பசிதீர்வார் அகலிடத்திற் பிறந்தோரே. 46

38. வேளாண்மை முதலாதலின் சிறப்பு
அந்தணர்க்கு வேதமுதல் அரசருக்கு வெற்றிமுதல்
முந்தியசீர் வணிகருக்கு முதலாய முதலுலகில்
வந்தவுயிர் தமக்கெல்லா மருந்தாக வைத்தமுதல்
செந்தமிழ்க்கு முதலாய திருவாளர் செய்முதலே. 47

39. பயிர் வளர்திறத்தின் சிறப்பு
சீர்வளரும் மறைவளரும் திறல்வேந்தர் முடிவளரும்
பேர்வளரும் வணிகருக்குப் பெருநிதிய மிகவளரும்
ஏர்வளரும் திருவளரும் இசைவளரும் கடல்சூழ்ந்த
பார்வளரும் காராளர் பயிர்வளருந் திறத்தாலே. 48

40. நாளும் நீர் இறைத்தலின் சிறப்பு
காற்றுமேல் வருகின்ற கார்விடினுங் கடல்சுவறி
யாற்றுநீ ரறவெள்ளி யரசனுந்தெற் காயிடினும்
ஏற்றமே கொடுநாளும் இறைத்துலகம் விளைவித்துக்
காத்துமே யுயிர்வளர்த்தல் காராளர் தங்கடனே. 49

41. பாய்ச்சும் நீரின் சிறப்பு
கலையிட்ட மறைவேந்தர் கனல்வேள்வி வளர்ப்பதுவும்
மலையிட்ட புயத்தரசர் மணிமகுடஞ் சூட்டுவதும்
தலையிட்ட வணிகருயர் தனமீட்டப் படுவதுவும்
நிலையிட்ட வேளாளர் துலையிட்ட நீராலே. 50

42. நிலம் திருத்தலின் சிறப்பு
மேடுவெட்டி வளப்படுத்தி மிகவரம்பு நிலைநிறுத்திக்
காடுவெட்டி யுலகநெறிக் காராளர் காத்திலரேல்
மேடுவெட்டிக் குறும்பறுக்கும் வேல்வேந்த ரெற்றாலும்
காடுவெட்டி யுழுதுவரும் கலிகளைய மாட்டாரே. 51

43. சால்பலபோக்கி புழுதியாக்கலின் சிறப்பு
எழுதொணா மறைவிளங்கும் இயலிசைநா டகம்விளங்கும்
பழுதிலா அறம்விளங்கும் பார்வேந்தர் முடிவிளங்கும்
உழுதுசால் பலபோக்கி உழவருழக் கியவெங்காற்
புழுதியால் விளையாத பொருளுளவோ புகலீரே. 52

44. பைங்கூழ்ச் சிறப்பு
கெட்டாரைத் தாங்குதலாற் கேடுபடாத் தொழிற்குலத்தோர்
ஒட்டாரென் றொருவரையும் வரையாத உயர்நலத்தோர்
பட்டாங்கு பகர்ந்தோர்க்கும் பசியகலப் பைங்கூழை
நட்டாரே வையமெலாம் நலந்திகழ நட்டாரே. 53

45. நீர் பாய்ச்சுதலின் சிறப்பு
கார்தாங்குங் காவேரி நதிதாங்குங் காராளர்
ஏர்தாங்கு வாரன்றி யாவரே தாங்கவல்லார்
பார்தாங்கு மன்னுயிரின் பசிதாங்கும் பைங்கூழின்
நீர்தாங்கு வாரலரோ நிலந்தாங்கு கின்றாரே. 54

46. களை களைதற் சிறப்பு
வளைகளையும் மணிகளையும் மலர்களையும் வரும்பலவின்
சுளைகளையும் கொடுகரைக்கே சொரிபொன்னித் திருநாடர்
விளைகளையுண் செஞ்சாலி வேரூன்றி கோடுகொள்ளக்
களைகளையா விடில்வேந்தர் கலிகளைய மாட்டாரே. 55

47. கருப்பிடித்தலின் சிறப்பு
திருவடையும் திறலடையும் சீரடையும் செறிவடையும்
உருவடையும் உயர்வடையும் உலகெலா முயர்ந்தோங்கும்
தருஅடையும் கொடையாளர் தண்வயலிற் செஞ்சாலி
கருவடையும் பூதலத்திற் கலியடைய மாட்டாதே. 56

48. கதிர் முதிர்தலின் சிறப்பு
ஏற்றேறு மரன்சிறப்புக் கெழிலேறு மகத்தழல்கள்
மாற்றேறு மரசர்முடி வளர்ந்தேறும் வளமைமிகும்
ஊற்றேறுங் குலப்பொன்னி யுறைநாட ரிடுஞ்சாலி
ஈற்றேறும் போதுகலி யீடேற மாட்டாதே. 57

49. பசுங் கதிர்ச் சிறப்பு
முதிராத பருவத்தும் முற்றியநற் பருவத்தும்
கதிராகி யுயிர்வளர்ப்ப திவர்வளர்க்குங் கதிரன்றோ
எதிராக வருகின்ற எரிகதிருங் குளிர்கதிருங்
கதிராகி உயிர்வளர்ப்ப துண்டாயிற் காட்டீரே. 58

50. கதிரின் தலைவளைதற் சிறப்பு
அலைவளையும் புவிவேந்தர் அங்கையிற்றங் கியவீரச்
சிலைவளையு மதன்கருப்புச் சிலைவளையுங் கொடுங்கலியின்
தலைவளையுங் காராளர் தண்வயலிற் செஞ்சாலிக்
குலைவநயும் பொழுதினிற்செங் கோல்வளைய மாட்டாதே. 59

51. சோறிடுஞ் சிறப்பு
அறங்காணும் புகழ்காணும் அருமறையின் ஆகமத்தின்
திறங்காணும் செயங்காணும் திருவளர்க்கு நிதிகாணும்
மறங்காணும் கருங்கலியின் வலிதொலைத்த காராளர்
புறங்காணுஞ் சோறிட்டுப் புறங்காணப் புகந்திடினே. 60

52 அறுவடை கொநடையின் சிறப்பு
அரிவுண்ட பொற்கதிரை நெற்கதிர்நே ராதுலர்க்குப்
பரிவுண்ட பெருவார்த்தை புதிதன்று பழைமைத்தே
விரிவுண்ட கடற்படிவு மேகங்கள் மறுத்தாலுந்
திரிவுண்டோ காராளர் செயலினுக்குச் செப்பீரே. 61

53. அரி சூட்டின் சிறப்பு
கோடுவரம் பிடையுலவுங் குலப்பொன்னித் திருநாடர்
நீடுபெரும் புகழ்வளரு நிலமடந்தை திருமக்கள்
பீடுவரம் பிடைவயலிற் பிறைவாளிற் கடிகின்ற
சூடுவரம் பேறாதேற் சுருதிவரம் பேறாதே. 62

54. களம் செய்தலின் சிறப்பு
சீரான விறல்வேந்தர் செருவிளைத்துச் செல்லுவதும்
பேரான மனுநீதி பிறழாது விளங்குவதும்
நீராலே செஞ்சாலி விளைவித்து நெறிநடத்துங்
காராளர் விளைவயலிற் களம்பண்ணும் பொருட்டாலே. 63

55. போர் அடிவலியின் சிறப்பு
கடிசூட்டு மலர்வாளி காமனுடல் சூடுவதும்
கொடிசூட்டு மணிமாடக் கோபுரம்பொன் சூடுவதும்
முடிசூட்டி வயவேந்தர் மூவுலகும் இறைஞ்சுபுகழ்
படிசூட்டி யிருப்பதெல்லாம் படுசூட்டின் வலியாலே. 64

56. அடிகோலின் சிறப்பு
முருட்டின்மிகு வெம்பகைவர் முரண்கெடுத்திவ் வுலகமெல்லாம்
தெருட்டிநெறி செல்கின்ற செங்கோன்மை செலுத்துங்கோல்
வெருட்டின்மிகுங் கலியை வேரோடும் அகற்றுங்கோல்
சுருட்டிமிகத் தமர்ந்து செந்நெற் சூடுமிதித் திடுங்கோலே. 65

57. போர் செய்தற் சிறப்பு
காராளும் கதியினமும் பயிரினமும் கைவகுத்துப்
போராளு முடிவேந்தர் போர்க்கோல மென்னாளுஞ்
சீராளுஞ் செழும்பொன்னித் திருநாடர் புகழ்விளக்கும்
ஏராளும் காராளர் இவர்செய்யும் போராலே. 66

58. போர்க்களப் பாடுதற் சிறப்பு
வளம்பாடுங் குடைமன்னர் மதயானை படப்பொருத
களம்பாடும் பெருஞ்செல்வங் காசியினிற் சிறந்தன்று
தளம்பாடுந் தாரகலத் தாளாளர் தம்முடைய
களம்பாடும் பெருஞ்செல்வங் காசினியிற் சிறந்ததே. 67

59. இரப்பவரும் தோற்காச் சிறப்பு
பார்வேந்தர் பெருஞ்செல்வம் பழுதுபடா தொருநாளும்
ஏர்வேந்தர் பெருஞ்செல்வம் அழிவுபடா திருத்தலினால்
தேர்வேந்தர் போர்களத்துச் சிலர்வெல்வர் சிலர்தோற்பர்
ஏர்வேந்தர் போர்களத்துள் இரப்பவருந் தோலாரே. 68

60. போர் செய்வோர் நெல்லரிவாரை விளித்தற் சிறப்பு
நாவலோ நாவலென நாடறிய முறையிட்ட
ஏவலோர் போர்களத்தில் எதிர்நிற்பர் முத்தமிழ்தேர்
பாவலோ ரிசைவல்லோர் பற்றுடைய பதினெண்மர்
காவலோ ரெல்லாருங் கையேற்கும் பொருட்டாலே. 69

61. எருது மிதித்தலின் சிறப்பு
எடுத்தபோர்க் களத்தரசர் இணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் பயந்ததனாற் பார்தாங்கி வாழ்வதெல்லாம்
எடுத்தபோ ருழவளரு மிணைப்பகடு சிலநடத்திப்
படுத்தபோர் வையகத்தில் விளங்குகின்ற பயனாலே. 70

62. நெற்பொலியின் சிறப்பு
விற்பொலியுங் பெருங்கீர்த்தி வேளாளர் விளைவயலில்
நெற்பொலியுண் டாமாகில் நிலமகளும் பொலிவுண்டாம்
பொற்பொலிவுண் டாமுலகம் புகப்பொலிவுண் டாம்புலவோர்
சொற்பொலிவுண் டாங்கலியின் துயர்பொலிய மாட்டாதே. 71

63. நெற்குவியலின் சிறப்பு
தன்னிகரொன் றொவ்வாத தலம்வளர்க்கும் பெருக்காளர்
மன்னுபெருங் களத்தினிடை மாருதத்திற் றூற்றியிடுஞ்
செந்நெல்லைப் பொலிவாலே செம்பொன்மலை யெனக்குவித்தே
அந்நெல்லின் பொலியாலே அவனியுயிர் வளர்ப்பாரே. 72

64. நெற்கூடையின் சிறப்பு
ஆடையா பரணங்கள் அணிந்துமுடி சுமந்திடலும்
ஓடையா னையினெருத்த முயர்ந்துலகந் தாங்குதலும்
பேடையோ டனநீங்காப் பெருங்கழனிப் பெருக்காளர்
கூடையா னதுகையிற் கொண்டுகளம் புகுந்திடினே. 73

65. பொலி தூற்றுங் கூடைச் சிறப்பு
வலியாற்று மன்னவர்க்கும் தேவர்க்கும் மறையவர்க்கும்
ஒலியாற்றும் பேருலகில் உய்யவமு திடுங்கூடை
கலிமாற்றி நயந்தபுகழ்க் காராளர் தம்முடைய
பொலிதூற்றுங் கூடைக்குப் போதுவதோ புகலீரே. 74

66. பொலி கோலின் சிறப்பு
சீற்றங்கொள் கருங்கலியைச் செறுக்குங்கோல் செகதலத்துக்
கூற்றங்கொள் மனுநெறியை யுண்டாக்கி வளர்க்குங்கோல்
ஏற்றங்கொள் வயவேந்தர்க் கெப்பொருளுங் கொடுத்துலகம்
போற்றுஞ்சொற் பெருக்காளர் பூங்கையினிற் பொலிகோலே. 75

67. நெற்கோட்டையின் சிறப்பு
திருத்தோட்டுப் பிரமாவாற் செனிக்கின்ற உயிர்களுக்கும்
உருத்தோட்டும் புகழுக்கும் உரிமைமுறை வளர்க்கின்ற
வரைக்கோட்டுத் திணிபுயத்து வளர்பொன்னித் திருநாடர்
விரைக்கோட்டை கொண்டன்றோ வேந்தரிடுங் கோட்டைகளே. 76

68. கல்லறைச் சிறப்பு
தளர்ந்தவுயி ரித்தனைக்குந் தாளாள ரெண்டிசையும்
வளர்ந்தபுகழ் பெருக்காளர் வளமையா ருரைப்பாரே
அளந்துலக மனைத்தாளும் அரசர்வே தியர்புலவர்
களந்துவைக்க வையுகுத்த கல்லறைக ளுண்பாரேல். 77

69. வேளாளர் பெறும் பேற்றின் சிறப்பு
அரியா தனத்தின் மேலிருந்தே யம்பொற் குடைக்கீ ழரசியற்றும்
பெரியார் பக்கல் பெறும்பேறும் பேறேயல்ல பெருக்காளர்
சொரியா நிற்பச் சிலர் முகந்து தூற்றா நிற்பச் சிலரளந்து
புரியா நிற்பப் பெரும்பேறுக் கதுநே ரொக்கப் போதாதே. 78

70. நன்மங்கல வாழ்த்து
பார்வாழி நான்மறைநூற் பருணிதரா குதிவாழி
கார்வாழி வளவர்பிரான் காவேரி நதிவாழி
பேர்வாழி பெருக்காளர் பெருஞ்செல்வக் கிளைவாழி
ஏர்வாழி யிசைவாழி யெழுபத்தொன் பதுநாடே. 79

New Page 2