வீர விளக்கு வ.வே.சுப்பிரமணிய ஐயர்

July 29, 2006

இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவரும், சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளருமான வரகனேரி வேங்கடேச சுப்பிரமணிய ஐயர், வேங்கடேச ஐயர் - காமாட்சி தம்பதியினருக்கு மகனாக திருச்சிராப்பள்ளி வரகனேரியில் 1881 ஏப்ரல் 2 ஆம் நாள் பிறந்தார்.

தூயவளனார் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றுப் பின்னர் சென்னை சென்று ப்ளீடர் (வக்கில்) பரிட்சையில் முதல் பிரிவில் தேறி, ஜில்லா கோட்டில் முதல் வகுப்பு ப்ளீடராகச் சேர்ந்து வக்கீல் தொழில் நடத்தினார். லண்டன் சென்று பாரிஸ்டர் பட்டம் பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் லண்டன் சென்று அங்கு இந்தியா ஹவுஸில் தங்கினார்.

பட்டம் பெற வந்த வ.வே.சுவை சுதந்திர வீரராக்கியது இந்தியா ஹவுஸ். ஷாம்ஜி கிருஷ்ணவர்மா, சாவர்க்கர், டி.எஸ்.எஸ். ராஜன் போன்றவர்களின் நட்பு, இந்தியா ஹவுஸில் ரகசியமாக இயங்கி வந்த “அபிநவபாரத்” சங்கத்தில் வ.வே.சுவை உறுப்பினராகச் சேரவைத்தது. இச்சங்கம் இந்திய விடுதலைக்கான இளைஞர்களின் களமாகத் திகழ்ந்தது. வ.வே.சு ராணுவ வீரருக்குரிய போர்ப் பயிற்சிகளை இங்குக் கற்றுக் கொண்டார்.

1909இல் தசரா பண்டிகையைத் தேசிய விழாவாக இந்தியா ஹவுசில் கொண்டாடினர். அதில் சிறப்பு விருந்தினராகக் காந்தி அடிகளை அழைத்து வந்து பேச வைத்தனர். இதே ஆண்டில் கர்னல் கர்ஸான் வில்லி லண்டனில் சுடப்பட்டார். இவரைச் சுட்டுக்கொன்றவர் மதன்லால் திங்காரா என்ற இந்திய ஹவுஸ் மாணவர். இதனால் வ.வே.சு உட்பட பலரும் தலைமறைவாயினர்.

லண்டனில் இருந்த வ.வே.சு மாறுவேடத்தில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் சுற்றிவிட்டு, 1910இல் இந்தியா வந்து புதுச்சேரியில் தங்கினார். இங்கு பாரதி, நீலகண்ட பிரம்மச்சாரி, வ.ரா. அரவிந்தர் போன்றவர்களோடு இணைந்து இந்திய விடுதலைக்குப் போராட முன்வந்தார். இங்கு “தர்மாலயம்” என்ற இல்லம் அமைத்து சுதந்திரப்போருக்கு வீரர்களைத் தயாரிக்கும் விதமாக அவர்களுக்குக் குத்துச்சண்டை, குஸ்தி, சிலம்பம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற பயிற்சிகளை வ.வே.சு. கற்பித்தார். அவரால் இங்குப் பயிற்சிக் கொடுக்கப்பட்டவர் தான் கலெக்டர் ஆஷை கொன்ற வாஞ்சிநாதன். ஆஷ் படுகொலைக்குப் பிறகு புதுச்சேரியில் தீவிரவாத குழுக்கள் இயங்க முடியாத நிலை உருவானது.

1920ல் பொது மன்னிப்புப் பெற்று வ.வே.சு திருச்சிராப்பள்ளி வந்தார். 14 ஆண்டுகளுக்குப் பிறகு வரகனேரி இல்லம் வந்த அவர் காங்கிரஸ் இயக்கத்தில் பங்கு கொண்டு உழைத்தார். 1920இல் சென்னை சென்று தேசபக்தன் இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பணியாற்றினார். இராஜதுவேஷ குற்றம் சாட்டப்பட்டு பெல்லாரி சிறையில் சிலகாலம் இருந்து பின்னர் விடுதலையானார். 1922இல் சேரன் மாதேவியில் தமிழ்க்குருகுலம் என்ற கல்வி நிலையத்தையும் அதை நிர்வகிக்க பரத்வாஜ் ஆசிரமத்தையும் அமைத்தார். 1924இல் பாலபாரதி என்ற இதழைத் தொடங்கினார்.

மிகச் சிறந்த சுதந்திரப் போராட்ட வீரராகத் திகழ்ந்ததைப் போலவே வ.வே.சு. இலக்கியப் புலமையிலும் சிறந்து விளங்கினார். கம்ப நிலையம் என்ற நூல் விற்பனையகத்தைத் தொடங்கி ஏராளமான நூல்களை வெளியிட்டார். மாஜினியின் சுயசரிதை, கரிபாலிடியின் வரலாறு, நெப்போலியன், தன்னம்பிக்கை, கம்பராமாயணம் ஓர் ஆராய்ச்சி போன்ற நூல்களை எழுதியுள்ளார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். லண்டனில் இருந்தபோது பாரதியின் இந்தியா இதழில் “லண்டன் கடிதம்” என்ற பெயரில் தொடர்ந்து எழுதினார். இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதியாகும். வ.வே.சு என்னும் சுதந்திர வீரவிளக்கு பாபநாசம் அருவியில் தவறி விழுந்த தனது மகளைக் காப்பாற்ற முனைந்து 1925 ஜுன் 4ல் அணைந்தது

சு. முருகானந்தத்தின் நடந்தாய் வாழியிலிருந்து

அறிஞர் : புரட்சியாளர் வ.வே.சு.ஐயர்

Posted by revathi on 2005/3/8 11:35:19 (41 reads)

வ.வே.சு ஐயர் கம்பீரமான தோற்றம் உடையவர். மார்பை எட்டிப் பார்க்கும் அழகான கருப்பு தாடி; அன்பு ஒழுகும் கண்கள்; செருகிக் கட்டப்பட்ட முரட்டுக் கதர்; மேலே உடம்பு முழுவதும் போர்த்தப்பட்ட ஓர் ஆடை; நெற்றியில் பிறைசந்திரக்குறி; குளிர்ந்த பார்வை; உண்மை முனிவரின் தோற்றம்; நிமிர்ந்த நடை, ஒரு தனி அழகு கொண்டது; நடப்பதற்கும் நடை என்று பெயர் ஒழுக்கத்திற்கும் தமிழில் நடையென்று பெயர்; இரண்டிலும் சாலச் சிறந்தவர் வ.வே.சு ஐயர்.

வரகனேரி வெங்கடேச சுப்பிரமணிய ஐயர் திருச்சி வரகனேரியைச் சேர்ந்த வேங்கடேச ஐயருக்கும், சின்னாளப் பட்டி எனும் ஊரைச் சேர்ந்த காமாட்சியம்மாளுக்கும் 2.4.1881இல் பிறந்தார். வேங்கடேச ஐயர் எம்.ஏ.தேர்ச்சி கண்டு, திருச்சி வரகனேரி வர்த்தக சங்கம், ஜனோபகார நிதி முதலிய நிறுவனங்களை நடத்தி வந்தார். சுப்பிரமணியம் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் பயின்றார். தம் பன்னிரண்டாம் வயதில் தகுதித் தேர்வு எழுதி (மெட்ரிகுலேஷன்) தேறினார். பதினாறாம் வயதில் பி.ஏ. பட்டத் தேர்வில் மாகாணத்தில் முதலாவதாகத் தேறினார்.

அவர், தம் பன்னிரண்டாம் வயதிலேயே அத்தை மகள் பாக்கியலட்சுமி அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டார். அவர் பி.ஏ. படித்து முடித்த பின்னர், சென்னை மாநகர் வந்து சட்டம் பயின்றார். வழக்கறிஞர் பட்டம் பெற்றதும் பத்தொன்பதாம் வயதில் திருச்சி திரும்பி வழக்கறிஞர் தொழில் நடத்தி வந்தார். இவரின் மைத்துனர் பசுபதி ஐயர் என்பார், இவரை ரங்கூனுக்கு அழைத்துச் சென்று பாரிஸ்டர் கல்வி பயில வைக்கத் திட்டமிட்டார். 1907இல் வ.வே.சு.ஐயர் ரங்கூன் வழி இலண்டன் ஏகினார்.

இலண்டனில் தீவிர தேசிய இயக்கவாதியான விநாயக தாமோதர சாவர்க்கரின் அறிமுகம் ஏற்பட்டது. சியாம் கிருஷ்ணவர்மா, விபின் சந்த்ரபால், லாலா ஹரிதயாள், மேடம் காமா முதலியோருடன் ஒன்றிப் பழகினார். தேசிய இயக்கத்தை ஒரு கண்ணாகவும், பாரிஸ்டர் கல்வியை மற்றொரு கண்ணாகவும் கொண்டிருந்தார். இலண்டனுக்கு 1908இல் வந்த காந்தி அண்ணலைச் சந்தித்தார். இவர் இலண்டனில் வாழ்ந்த காலத்தில் பாரதியாரின் “இந்தியா” பத்திரிகைக்கு எழுச்சியூட்டும் கட்டுரைகள் எழுதி அனுப்பி வந்தார்.

இலண்டன் “இந்தியா விடுதி” (India House)யில் தங்கியிருந்த அவருடன் 30 பேர் சேர்ந்து விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டனர். துப்பாக்கிப் பயிற்சி பெற்றார். புரட்சி இளைஞர் களுக்கும் அப்பயிற்சி அளித்தார். அவரிடம் பயிற்சியாளராக விளங்கிய மதன்லால் திங்க்ரா, 1909இல் கர்ஸன் வைலியைச் சுட்டுக் கொன்றார்.

திங்க்ராவிற்கு மரணதண்டனை அளிக்கப் பெற்றதும், அந்த வீர இளைஞர் தூக்குமேடை ஏறி, வீர மரணத்தைத் தழுவினார்.

திங்க்ரா, கர்ஸன் வைலியைக் கொன்றதன் விளைவாக, சாவர்க்கர் கைது செய்யப்பட்டார். பாரிஸ்டர் தேர்வு கண்ட வ.வே.சு. பட்டமளிப்பு விழாவில் அரச நம்பிக்கையாளன் உறுதிமொழி (ராஜவிசுவாசப் பிரமாணம்) எடுக்க மறுத்தார். அதையொட்டி அவரைக் கைது செய்ய ஆங்கில அரசு ஆணையிட்டது. சாவர்க்கரை வ.வே.சு சந்தித்தார். அப்போது சாவர்க்கர் வ.வே.சுவை எவ்வாறாயினும் இந்தியா தப்பிச் செல்லக் கூறினார். அவ்வண்ணம் வ.வே.சுவும் சீக்கியர்போல் வேடம் பூண்டு பிரான்ஸ் சென்றார். அங்கே அவரை வேவுபார்க்க வந்தவனிடம் தாம் வீர விக்ரம்சிங் என்ற சீக்கியர் என்று கூறி ஏமாற்றி, துருக்கி, கொழும்பு வழியாகப் பயணம் செய்தார். அப்பயணம் வீரதீர சாகசச் செயல்கள் நிறைந்தது.

1910 அக்டோ பர் 9ஆம் நாள் வ.வே.சு.ஐயர் புதுச்சேரி வந்தார். மண்டயம் ஸ்ரீ நிவாசாச்சாரியார், அரவிந்த கோஷ், மகாகவி பாரதியார் ஆகியோருடன் இணைந்தார். இங்கும் வ.வே.சு.ஐயர் ஓஇந்தியாஔவில் தொடர்ந்து எழுதி வந்தார். பல மொழிபெயர்ப்பு நூல்களை வடித்தார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். கம்பராமாயணப் பாலகாண்டப் பதப்பிரிப்புப் பதிப்பையும் கொணர்ந்தார்.

கலெக்டர் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்ற வாஞ்சிநாதன் என்னும் வீர இளைஞனுக்குப் புதுச்சேரியில் முன்னதாக வ.வே.சு. ஐயர் துப்பாக்கி சுடும் பயிற்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.

முதல்உலகப் போரின்போது, வ.வே.சு.ஐயரை அல்ஜியர்ஜுக்கு நாடு கடத்த ஆங்கில அரசு சூழ்ச்சி செய்து, பிரஞ்சு அரசை அணுகிற்று. இது கைகூடவில்லை. இப்போது அவருக்குக் காந்தியாரை இரண்டாம் முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது.

முதல் உலகப்போர் முடிந்ததும், வ.வே.சு பிரிட்டிஷ் இந்தியா வர அனுமதிக்கப்பட்டார். ஓதமிழ்த்தென்றல்ஔ திரு.வி.கலியாண சுந்தரனார் தேசபக்தன்ஒ இதழிலிருந்து விலகவும், அதன் ஆசிரியர் பொறுப்பை வ.வே.சு ஐயர் ஏற்றார். ஆனால் தேசபக்தனில் அவர் எழுதாத ஓர் எழுச்சிக் கட்டுரையைக் காட்டிப் பிரட்டிஷார் அவரைப் பெல்லாரி சிறைக்கு அனுப்பினர்.

ஒன்பது திங்கள் சிறையிருந்த அவர், “கம்பராமாயண ஆராய்ச்சி” எனும் அரிய நூலை ஆங்கிலத்தில் எழுதினார்.

சிறை விடுதலைக்குப் பின்னர், சேரன்மாதேவியில், 1923இல் “தமிழ்க்குருகுலம்”-”பாரத்வாஜ ஆசிரமம்” தொடங்கினார். தொழிற்கல்வியும் அறிவுக் கல்வியும் மாணவர்க்கு அளித்தார்.

இம்மையத்தை அடுத்த, வ.வே.சு. தமது உட்கிடக்கையாக விளங்கிய கெரில்லாப் புரட்சி முறைகளை முதிர்ந்தவர்க்கு புகட்டியதுடன், துப்பாக்கிச் சுடும் பயிற்சியை விடுதலை வேட்கிகளுக்கும் அளித்தார். “சங்கேத பாஷை”யில் செய்தி பரப்பி தேச விடுதலை உணர்வுக்கு உரம் இட்டு ஊக்கி வளர்த்தார்.

இலக்கியவாதியாக விளங்கிய இந்த அரசியல்வாதி தம் குருகுல மாணவர்களுடன் 3.6.1925 அன்று அம்பாசமுத்திரம் அருவி காணத் தம் மகள் சுபத்திராவுடன், மகன் கிருஷ்ணமூர்த்தியையும் அழைத்துக் கொண்டு சுற்றுலா சென்றார். அங்கு அவரும் அவர் மகள் சுபத்திரையும் எதிர்பாராது அருவியில் கால் வழுக்கி விழுந்து அமரத்துவம் எய்தினர்.

மொழியார்வம், முதிர்ந்த நாட்டப்பற்று, முனிவர்க்குரிய மனப்பக்குவம், வீரனுக்குரிய வேகம், நியாயவாதியின் நிதானம், நேர்மையாளர்க்குரிய நெஞ்சுரம், பழைமையில் பக்தி, புதுமையில் ஆர்வம், தொண்டுணர்வு, தியாக சிந்தை ஆகியவற்றின் முழு வடிவமாக விளங்கியவர் வ.வே.சு ஐயர். அவரது வாழ்க்கையே ஒரு வீர காவியம். அந்த இலக்கியவாதி தம் படைப்புகளின் மூலம் இன்றும் நம்மிடையே வாழ்ந்து வருகிறார்.

Comments »

The URI to TrackBack this entry is: http://velu.blogsome.com/2006/07/29/vs/trackback/

No comments yet.

RSS feed for comments on this post.

Leave a comment

Line and paragraph breaks automatic, e-mail address never displayed, HTML allowed: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <code> <em> <i> <strike> <strong>


New Page 2